மத்தியப் பிரதேசத்தில் காணாமல் போன 4.5 லட்சம் கழிவறைகள்; சிவ்ராஜ் சவுகானின் ஆட்சியில் ரூ.540 கோடி முறைகேடு

மத்தியப் பிரதேச மாநிலத்தில் சுமார் 4.5 லட்சம் கழிவறைகள் கட்டியதாகக் கணக்குக் காட்டி ரூ.540 கோடி முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள் அதிகம் வசிக்கும் கிராம பஞ்சாயத்துகளில் அரசு சார்பில் இலவச கழிப்பறை கட்ட 2012 ஆம் ஆண்டு அரசு நிதி ஒதுக்கியது.
இந்நிலையில், 2012 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை மத்தியப் பிரதேச மாநிலத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பல்வேறு இடங்களில் சுமார் 4.5 லட்சம் கழிவறைகள் கட்டப்பட்டதாக கணக்குக் காட்டி ரூ.540 கோடி முறைகேடு நடந்திருப்பதும், வேறு இடங்களில் கட்டப்பட்ட கழிவறைகளின் முன் வீட்டு உரிமையாளர் நின்று எடுத்துக் கொண்ட போட்டோவை சமர்ப்பிக்கப்பட்டது. கணக்குக் காட்டப்பட்ட ஒரு இடத்தில் கூட கழிவறை இல்லாததும் தெரிய வந்துள்ளது.
லக்கட்ஜாம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராம மக்கள் சிலர், தங்கள் வீடுகளில் கழிவறைக் கட்ட விண்ணப்பித்தபோது, அவர்களது பெயர்களில் ஏற்கனவே கழிவறை வசதி செய்ய மத்திய அரசின் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தகவல் கொடுத்த போதுதான் இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், அதிகாரிகள் நடத்திய ஆய்வில், மாநிலம் முழுவதும் சுமார் 4.5லட்சம் கழிவறைகள் கட்டப்பட்டதாக வெறும் கணக்கு மட்டுமே காட்டப்பட்டு, ரூ.540 கோடி அளவுக்கு மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.